schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
யோகி ஆதித்யநாத் சாதனைக்கு குவியும் பாராட்டுகள். உத்திரப்பிரதேசத்தில் 4 ஆண்டுகளில் 12 மருத்துவக் கல்லூரிகள், 48 மருத்துவக் கல்லூரிகளாக உயர்வு என்கிற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு ஒன்றில் இடம் பெற்றிருக்கும் உத்திர பிரதேசம் குறித்த செய்திப் புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனை என்கிற செய்தி இடம்பெற்றுள்ள அந்த நியூஸ் கார்டில், உபி மருத்துவமனைக்கு பதிலாக சென்னை காமாட்சி மருத்துவமனையின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதனை ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டினை பாஜகவின் முக்கிய பிரமுகர் கே.டி.ராகவன் உள்ளிட்டப் பலரும் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், காமாட்சி மருத்துவமனையின் புகைப்படம் இடம் பெற்றிருந்த வகையில் மட்டும் குறிப்பிட்ட செய்தி நிறுவனம் அந்த நியூஸ் கார்டினை தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கி விளக்கம் வெளியிட்டிருந்தது.
ஆனால், அந்த குறிப்பிட்ட நியூஸ் கார்டு, சாதிக்கும் யோகி அரசு என்கிற அடைமொழியுடன் “யோகி ஆதித்யநாத் சாதனைக்கு குவியும் பாராட்டுகள். உத்திரப்பிரதேசத்தில் வெறும் 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எண்ணிக்கையை ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் அதை 48 ஆக உயர்த்தியது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு” என்ற தகவலுடன் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் குறித்த உண்மை நிலை அறிய அதுதொடர்பான செய்திகள் மற்றும் ஆவணங்களை ஆராயத்துவங்கினோம்.
முதலாவதாக, யோகி தலைமையிலான பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று உத்திரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், ஜூலை 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் Status of Medical Education in India என்கிற Members of Parliament reference என வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு ஆவணத்தில் Annexure 1, State wise Details of Medical colleges for AY 2016-2017 என்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, யோகி அரசு பதவியேற்பதற்கு முன்பான மருத்துக்கல்லூரிகளின் எண்ணிக்கை இதில் இடம் பெற்றுள்ளது.
அதன்படி, உபியில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே அரசு மருத்துவக்கல்லூரிகள் 16, தனியார் மருத்துவக்கல்லூரிகள் 29 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 45 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, 2017 ஆம் ஆண்டில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்திருந்தாலும் கூட 2016 முதலே 12க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உத்திரப்பிரதேசத்தில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.
அடுத்து, MOHFW வெளியிட்டிருக்கும் 2017-2018 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் உத்திரப்பிரதேசத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 30 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 2017-2018 ஆண்டில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, 47 கல்லூரிகள் கணக்கில் இடம்பெற்றுள்ளன.
லோக்சபா கேள்விகள் என்கிற தலைப்பின் கீழ் வெளியாகியிருக்கும் Annexure வெளியீட்டில், (01/02/21) உத்திர பிரதேசத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 31 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலமாக 2021 பிப்ரவரி வரையில், 11 புதிய மருத்துவக் கல்லூரிகளே உத்திரபிரதேசத்தில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளன என்பது மேற்கூறிய 2016-2017, 2017-2018 தரவுகளுடன் ஒப்பிடும்போது தெரிய வருகிறது.
முன்னதாக, 2015-2016 அதாவது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவியேற்பதற்கு முன்பாக MOHFW வெளியிட்டுள்ள CSS அறிக்கையில், உத்திரபிரதேசத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அதாவது 36 மருத்துவக் கல்லூரிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆண்டு வெளியாகியுள்ள செய்தி ஒன்றில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 15 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருவதாகும், 14 கல்லூரிகளுக்கு அனுமதி பெற காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மே 25, 2021 அன்று வெளியாகியுள்ள செய்தி ஒன்றில் இனாகண்டி ரவிகுமார் என்பவர் பதிவு செய்த ஆர்.டி.ஐ குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், கடந்த ஏழு ஆண்டுகளில் உபியில் CSSன் கீழ் 27 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று, மார்ச் 18, 2021 அன்று வெளியான செய்தி ஒன்றில் கடந்த நான்கு வருடங்களில் 30 புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால், வைரலாகும் நியூஸ் கார்டில் கிட்டதட்ட 18 மருத்துவமனைகள் அதிகமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், Directorate of Medical education UP என்கிற இணையதளத்தில் 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரே ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியுமே (ஹப்பூர் 2017) குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவக்கல்லூரி என்கிற வாசகமே குறிப்பிட்டுள்ள வைரல் நியூஸ் கார்டில் சொல்லப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய தரவுகளின் மூலமாக யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு முன்பு 12 மருத்துவக் கல்லூரிகள், ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் 48 மருத்துவக் கல்லூரிகள் என்கிற கூற்றே முரண்படுகிறது.
மேலும், ஜூலை 9 அன்று ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கவிருப்பதாகவும், அதன் மூலமாக ஏற்கனவே இருக்கும் 36 கல்லூரிகளுடன் இதுவும் இணைந்து 48 ஆகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் குறிப்பிட்ட அந்த ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படவில்லை; ஜூலை 9 அன்றே திறக்கப்படுகிறது என்பது செய்தியின் மூலமாகத் தெரிகிறது.
அந்த செய்தியிலும் அதிகாரிகள் 2017 மார்ச்சுக்கு முன்பாக வெறும் 12 மருத்துவக் கல்லூரிகளே உத்திரபிரதேசத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்கோள் காட்டப்பட்டுள்ள அரசுத்தரவுகளுடனேயே இந்த கூற்று முரண்படுகிறது.
இதுகுறித்து, உபி அரசு தரப்பு விளக்கம், அதிகாரிகள் விளக்கம் ஆகியவற்றிற்கு முயன்று வருகிறோம். அதற்கான தெரிவுகள், அரசு தரப்பு விளக்கம் நமக்குக் கிடைக்கும் பட்சத்தில் அதனையும் இணைக்க முயற்சிக்கிறோம்.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் உரிய தரவுகள் இன்றி பரப்பப்படுகிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
News Sources:
Official Sources:
Status of Medical Education in India
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|