schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதங்களில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் நோன்பிருந்து, சூரியன் மறைந்ததும் மாலையில் உணவு உண்பர். இந்த உணவிற்கு இப்தார் என்று பெயர்.
சமூக வலைத்தளங்களில் தற்போது சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இப்புகைப்படத்தில் இந்தியாவின் முக்கிய தலைவர்களான ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பதை காண முடிகின்றது.
வைரலாகும் புகைப்படத்தில், “சுதந்திரம் கிடைத்த பிறகு 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத், அவருடன் பணிபுரிபவர்களுக்கு முதல் இப்தார் விருந்தை அளித்தார் என்றும், இவ்விருந்தில் ஜவஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர் என்றும்” குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: ஜேஎன்யு விவகாரம்: காவல்துறையினர் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்தனரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இதில் Wikimedia commons எனும் தளத்தில் ‘Prime Minister Jawaharlal Nehru with his cabinet, including Dr Babasaheb Ambedkar, the then law minister, sitting down for a meal.’ எனும் தலைப்பிட்டு இப்படம் பதிவு செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது. இதை தமிழில் மொழி பெயர்த்தால், பிரதமர் ஜவஹர்லால் நேரு சட்ட அமைச்சர் அம்பேத்கர் உட்பட கேபினட் அமைச்சர்களுடன் உணவருந்தினார் என்றே பொருள்படும்.
மேலும் இப்புகைப்படம் குறித்த விளக்கததை மொழிப்பெயர்த்ததில், ராஜகோபாலாச்சாரியார் முதல் இந்தியன் கவர்னர் ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சர்தார் வல்லபாய் படேல் கேபினட் அமைச்சர்களுக்கு விருந்தளித்தார். இவ்விருந்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, மௌலானா ஆசாத் மற்றும் மற்ற அமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தை அறிய முடிந்தது.
இதேபோல் லைவ் ஹிஸ்ட்ரி இந்தியா ( Live History India) எனும் இணையத்தளத்திலும் இப்புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதிலும் இப்புகைப்படமானது 1948 ஆம் ஆண்டு சி.ராஜகோபாலாச்சாரி முதல் இந்தியன் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றதற்கு சர்தார் வல்லபாய் படேல் விருந்தளிக்கும்போது எடுக்கப்பட்டது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல் அலாமி இணையத்தளத்திலும் இப்படம் இதே விளக்கத் தகவலுடன் இடம்பெற்றுள்ளதை நம்மால் காண முடிந்தது.
வைரலாகும் படம் குறித்து மேலும் தேடுகையில், வைரலாகும் நிகழ்வு குறித்த மற்றொரு புகைப்படம் Zoroastrians எனும் இணையத்தளத்தில் நமக்கு கிடைத்தது.
ராஜகோபாலாச்சாரி கவர்னர் ஜெனரலாக பதவியேற்றதற்கு சர்தார் படேல் அளித்த விருந்தில் நேரு கேபினர் அமைச்சர்கள் கலந்து கொண்டனர் என்று இப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஃபி அஹமது கித்வாய், பல்தேவ் சிங், மௌலானா ஆசாத், ஜவஹர்லால் நேரு, சி. ராஜகோபாலாச்சாரி, சர்தார் வல்லபாய் படேல், ராஜ் குமாரி அம்ரித் கௌர், ஜான் மத்தாய், ஜக்ஜீவன் ராம், காகில், நியோகி, டாக்டர் அம்பேத்கர், ஷ்யாம பிரசாத் முகர்ஜி, கோபாலசாமி அய்யங்கார்,மற்றும் ஜெயராம்தாஸ் தலத்ராம் ஆகியோர் இவ்விருந்தில் கலந்துக்கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: ராசு வன்னியர் என்று வழித்தடம் ஒன்றிற்கு பெயரிட்டதா கலிஃபோர்னியா அரசு?
நம் ஆய்வின் மூலம் தெளிவாகுவது என்னவென்றால், சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அப்புகைப்படமானது ராஜகோபாலாச்சாரி கவர்னர் ஜெனரலாக பதவியேற்றதற்கு சர்தார் படேல் விருந்தளித்தபோது எடுக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இந்த கட்டுரையானது உருது மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 2, 2024
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 25, 2022
|