schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: இயக்குனர் பாலா அடித்ததால் வணங்கான் படத்திலிருந்து விலகினேன் என்றார் மமிதா பைஜூ
Fact: இத்தகவல் தவறானதாகும். மமிதா பைஜூ இதை மறுத்துள்ளார்.
இயக்குனர் பாலா தற்போது வணங்கான் எனும் திரைப்ப்டத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் முதலில் சூர்யா, கிரீத்தி ஷெட்டி, மலையாள நடிகை மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்து வந்தனர். பின்னர் இப்படத்திலிருந்து சூர்யா விலக அருண் விஜய் நடிப்பில் மீண்டும் இப்படம் படப்பிடிப்பில் உள்ளது.
இந்நிலையில் பாலா அடித்ததால்தான் வணங்கான் படத்திலிருந்து விலகினேன் என்று மமிதா பைஜு கூறியதாக தகவல் ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!
இயக்குனர் பாலா அடித்ததால் வணங்கான் படத்திலிருந்து விலகினேன் என்று மமிதா பைஜூ கூறியதாக ஊடகங்களில் வந்தச் செய்தியானது கிளப் எஃப்எம் என்கிற யூடியூப் சேனலுக்கு மமிதா பைஜு கொடுத்த நேர்காணலின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
எனவே அந்த நேர்காணல் குறித்து தேடினோம். இத்தேடலில் கிளப் எஃப்எம் யூடியூப் சேனலில் பிப்ரவரி 15, 2024 அன்று குறிப்பிட்ட அந்த நேர்காணல் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த நேர்காணலின் 17:20 நேரத்தில் வணங்கான் குறித்த கேள்வி மமிதா பைஜுவிடம் கேட்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. வணங்கான் குறித்து மொத்தம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அக்கேள்விகளும், அதற்கு மமிதா பைஜு அளித்த பதில்களும் பின்வருமாறு:
நெறியாளர்: சூர்யா, பாலாவின் படத்தில் நீங்கள் நடித்தீர்களா?
மமிதா: நடித்தேன். 30லிருந்து 35 நாட்கள் சூட்டிங் நடந்ததது.
நெறியாளர்: பாலாவுடன் பணிபுரிந்தது எப்படி இருந்தது. தமிழ் நடிகர் விஷால் என்னிடம் கூறியுள்ளார். பாலாவுடன் பணிபுரிந்தால், அவர் நம்மை பிழிந்து எடுத்துவிடுவார் என்று. உண்மையிலேயே அப்படித்தான் இருந்ததா?
மமிதா: அப்படித்தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும், குறிப்பிட்ட வட்டார வழக்கு தமிழ்தான் அதில் பயன்படுத்தப்பட்டது. சாதாரண தமிழ் இல்லை அது. அதை கற்றுக்கொள்வதற்கு சிரமமாக இருந்தது. நமக்கு ஸ்கிரிப்ட் தர மாட்டார்கள். படப்பிடிப்பு தளத்துக்கு போன பிறகே நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அந்த நேரத்தில் பெரிய வசனம் தந்தால் நாம் மாட்டிக்கொள்வோம்.
ஒருநாள் வில்லுப்பாட்டு பாடுவதுபோல் ஒரு காட்சி இருந்தது. நான் அவர்களிடம் இதை நான் தொடக்கத்திலிருந்தே செய்பவளா, அல்லது புதியதாக கற்றுக்கொள்பவளா என கேட்டேன். அதற்கு அவர்கள் நீ தொடக்கத்திலிருந்தே செய்பவள்தான் என கூறினர்.
ஆனால் அதை செய்வதற்கு ஒரு பழக்கம் வேண்டுமல்லவா? அதற்கென்று ஒரு ஸ்டைல் இருக்கின்றது அல்லவா?
பாலா அந்த பெண் செய்வது உனக்கு தெரிகின்றதா என என்னிடம் கேட்டார். நான் பார்த்தேன், அந்த பெண் ஏதோ செய்துக் கொண்டிருந்தார். உடனே அவர் போய் அதை செய் என்று கூறிவிட்டு டேக் என்று கூறிவிட்டார். எனக்கு படப்படப்பாகி விட்டது. நான் தயாராக இல்லை. அவர்கள் பாடுவது என்னவென்றெ எனக்கு புரியவில்லை. அதற்குப்பின் மூன்று டேக்கில்தான் அதை நான் கற்றுக்கொண்டேன். அதற்குள் நிறைய திட்டுகள் விழுந்தது. அது பரவாயில்லை. நான் எது கேட்டாலும் இந்த காதில் வாங்கி மற்ற காதில் விட்டுவிடுவேன்.
அதை சார் குறிப்பிட்டு சொன்னார். நான் அப்படித்தான் பேசுவேன். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிலசமயம் அது கஷ்டமாக இருக்கலாம். அதை விட்டு விடவேண்டும் என்று கூறியுள்ளார். சில சமயம் முதுகில் அடிக்கவும் செய்வார்.
நெறியாளர்: சூர்யா என்ன கூறினார்?
மமிதா: சூர்யா சாருக்கு ஏற்கனவே தெரியும் இல்லையா? ஏற்கனவே அவர்கள் பணிபுரிந்துள்ளார்கள். நமக்குதான் அது புதியது. அவர்களுக்குள் இருக்கும் புரிதல் நன்றாக இருக்கும்.
இதனடிப்படையில் பார்க்கையில் இந்த நேர்காணலில் பாலா தன்னை அடித்தது குறித்தோ, திட்டியது குறித்தோ மமிதா பைஜு புகாராக எதையும் தெரிவிக்கவில்லை. ஒரு அனுபவமாகவே பகிர்ந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. அதேபோல் அப்படத்திலிருந்து விலகியது குறித்தும் அவர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
தொடர்ந்து இதுக்குறித்து தேடுகையில் வைரலாகும் இந்த ஊடகச் செய்திகளை மறுத்து மமிதா பைஜூ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
“திரைப்பட புரொமோஷனுக்காக நான் தந்த நேர்காணலில் கூறிய விஷயங்களை திரித்து தவறான தலைப்புடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நான் பாலாவுடன் ஏறக்குறைய ஒரு ஆண்டு பணிபுரிந்துள்ளேன். அவர் நான் ஒரு நல்ல நடிகராக ஆக எப்போதும் உதவியுள்ளார். எனக்கு அவரால் மனரீதியான துன்பம் அல்லது உடல்ரீதியான துன்பம் அல்லது வேறு விதமான அவமானங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு மற்ற படங்களில் வேலைகள் இருந்ததாலேயே நான் அப்படத்திலிருந்து விலகினேன்” என்று அப்பதிவில் மமிதா தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தேடுகையில் மமிதா பைஜு பாலிமர் நியூஸுக்கு வைரலாகும் இத்தகவல் தவறானது என்று தொலைபேசி வாயிலாக தெளிவுப்படுத்தியிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பாலா அடித்ததால் மமிதா பைஜு வணங்கான் படத்திலிருந்து விலகியதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது தெளிவாகின்றது.
Also Read: பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசியதாக பரவும் பழைய வீடியோ!
இயக்குனர் பாலா அடித்ததால் வணங்கான் படத்திலிருந்து விலகினேன் என்று மமிதா பைஜூ கூறியதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube Video from Club FM, February 15, 2024
Instagram Story from Mamitha Baiju
Tweet from Polimer News, Dated February 29, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|