| schema:text
| - விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தேவாலயம் இடிக்கப்பட்டதா? - உண்மை இதுதான்
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தேவாலயம் இடிக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து விரிவாக பார்க்கலாம்.
Claim :
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு கிறிஸ்தவ தேவாலயம் இடிக்கப்பட்டதுFact :
கேரளாவில் இடுக்கியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போல தவறான பரப்பப்படுகிறதுதமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்து மே 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 107 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால் விஜய் மே 10ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். தற்போது வரை முதல்வருடன் சேர்த்து 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
விஜய் முதலமைச்சரானதன் மூலம் சிறுபான்மை கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டில் முதல்முறையாக முதல்வராகி உள்ளார் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே சமயம் தவெக அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு போலிச் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
பரவும் தகவல்
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தவெக அரசு கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை இடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் கிறிஸ்தவ தேவாலயம் இடிக்கப்படுவது அங்குள்ள பெண்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுமாக காட்சிகள் உள்ளன.
வீடியோவைப் பகிர்ந்த @rajateach என்ற எக்ஸ் பதிவர், “அடுத்த ஆதித்யநாத் யோகியாக மாறினாரா ஜோசப் விஜய். கிறிஸ்தவ சொந்தங்களே தேவையா உங்களுக்கு இது?. கிறிஸ்தவ சகோதரர் ஆளா போகிறார் என்று நீங்கள் போட்ட ஓட்டு, இன்று உங்களுக்கு நீங்களே வைத்த வேட்டு” என்று குறிப்பிட்டு விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்.
இதேபோலவே தவெக அரசு கிறிஸ்தவ தேவாலயத்தை இடித்ததாக வைரல் வீடியோவைப் பகிர்ந்து பதிவு 1, பதிவு 2 ஆகியவற்றிலும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. உண்மையில் அது தமிழ்நாட்டில் நடந்த சம்பவமே இல்லை என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை, அமைச்சர்களே இப்போதுதான் பதவியேற்றுள்ளனர் என்ற நிலையில், தேவாலயத்தை இடித்துவிட்டார்கள் என்ற செய்தி சந்தேகத்தை எழுப்பியது. இதனால் சம்பவம் எப்போது நடைபெற்றது, எங்கு நடைபெற்றது என்பதை அறிய ஆய்வில் ஈடுபட்டோம். முதலில் வீடியோவை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளிட்டோம். அதில் வைரல் வீடியோ மற்றும் அதுபற்றிய செய்திகள் மலையாளத்தில்தான் அதிகமாக இருந்தன.
ஏசியாநெட் நியூஸ் மலையாளம் மே 7, 2026 அன்று வெளியிட்ட செய்தியில், இடுக்கி மாவட்டம் பூப்பாராவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன; ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களும் வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வீடியோவில் தேவாலய பெயர் பலகை கீழே பூப்பாறை, இடுக்கி மாவட்டம், கேரளா என்று தமிழில் எழுதப்பட்டு இருந்ததையும் உறுதி செய்துகொண்டோம்.
இதேபோல மீடியா ஒன் டிவி என்ற பேஸ்புக் பக்கத்திலும், “ஆற்றங்கரை நிலம் கையகப்படுத்தப்பட்டது: இடுக்கி பூப்பாராவில் கோயில், தேவாலயம் இடிப்பு; 88 கட்டிடங்கள் இடிப்பு; கடும் பாதுகாப்பில் நடவடிக்கை” என்ற தலைப்பிட்டு தேவாலயம் இடிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டு இருந்தது.
இதனையடுத்து நாம் இடுக்கி பூப்பாரா ஆக்கிரமிப்புகள் அகற்றம் பற்றி தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் சர்ச் செய்தோம். தி இந்து வெளியிட்ட அதே மே 7ம் தேதி அதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், “ கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி பன்னியாறு ஆற்றின் படுகையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட 29 வீடுகள், மூன்று மத நிறுவனங்கள் மற்றும் 56 வணிக நிறுவனங்கள் உட்பட 88 கட்டுமானங்களை மாவட்ட நிர்வாகம் அகற்றியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா, மலையாள மனோரமா ஆகிய இணையதளங்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில் அல்ல, கேரளத்தில் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். குறிப்பாக கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி பகுதியில் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடந்துள்ளது. அதனால் அங்குள்ள தேவாலயத்தில் தமிழ் பெயர் பலகை இருந்துள்ளது. ஆனால், கேரளத்தில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைந்த பிறகு நடந்ததாக பரப்புகிறார்கள்.
முடிவு
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு கிறிஸ்தவ தேவாலயம் இடிக்கப்பட்டதாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகிறது. அது மே 7ஆம் தேதி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூப்பாராவில் நீதிமன்ற உத்தரவுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மைக் கண்டறியும் குழு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறது.
|