| schema:text
| - Fact Check: பாகிஸ்தானில் சகோதரர் தனது உடன்பிறந்த சகோதரியை திருமணம் செய்துகொண்டதாகக் கூறும் போஸ்ட் போலியானது
பாகிஸ்தானின் கராச்சியில் ஒரு சகோதரர் தனது உடன்பிறந்த சகோதரியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு திருமணமான தம்பதியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
- By: Umam Noor
- Published: Jan 30, 2025 at 05:26 PM
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): பாகிஸ்தானின் கராச்சியில் ஒரு சகோதரர் தனது உடன்பிறந்த சகோதரியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு திருமணமான தம்பதியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. பாகிஸ்தானின் ஏஆர்ஒய் (ARY) நியூஸ் சேனல் இந்த செய்தியை வெளியிட்டதாக வைரல் பதிவுகள் கூறுகின்றன.
ஆனால், விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என்பது உறுதியானது. இந்த புகைப்படம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த ஒரு திருமணத்தின் புகைப்படம். பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினருக்கு எந்த குடும்ப உறவும் இல்லை, மேலும் அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்ற கூற்று அடிப்படையின்றி பரப்பப்படுகிறது. மேலும், ஏஆர்ஒய் (ARY) நியூஸ் அத்தகைய செய்தி எதையும் தெரிவிக்கவில்லை.
வைரல் பதிவில் என்ன இருக்கிறது?
ஃபேஸ்புக் பயனர் ‘தீபக் சி ஜரிவாலா’ வைரல் படத்தைப் பகிர்ந்து, “பாகிஸ்தானின் கராச்சியில், ஒரு சகோதரர் எங்கள் சமூகத்தில் எல்லாம் அனுமதிக்கப்படுகிறது என்று கூறி தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்,: ARY.” என்று கூறியுள்ளார்
இந்த போஸ்ட்டின் ஆர்க்கைவ்டு பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த கூற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, ஏஆர்ஒய் (ARY) நியூஸின் இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் கூறப்படும் சம்பவத்தின் குறிப்பு ஏதும் உள்ளதா என்று தேடத் தொடங்கினோம். ஆனால், எங்கள் தேடல் எந்த முடிவையும் தரவில்லை – ARY நியூஸ் அத்தகைய செய்தி எதையும் வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ இல்லை.
அடுத்து, வைரல் ஆன புகைப்படத்தின் ரிவர்ஸ் இமேஜ் தேடலை நடத்த கூகுள் லென்ஸைப் பயன்படுத்தினோம். இது பிரைட்ஸ் ஆஃப் நார்த் டெக்சாஸ் என்கிற இணையதள கட்டுரைக்கு எங்களை அழைத்துச் சென்றது. இதில் டெக்சாஸில் நடைபெற்ற பாரம்பரிய பாகிஸ்தானிய முஸ்லீம் திருமணத்தின் விவரங்கள் இருந்தன. புகைப்படத்தில் உள்ள ஜோடி, லைலா மற்றும் அலி என அடையாளம் காணப்பட்டது, பரஸ்பர நண்பர்கள் மூலம் சந்தித்ததாக கூறப்படுகிறது.
அந்தக் கட்டுரை திருமணப் படங்களுக்கு ‘தாரா ஆர்செவன் (Tara Arseven) ஃபோட்டோகிராபி’ என்று குறிப்பிடுகிறது. புகைப்படத்தை ஆன்லைனில் தேடியபோது, அவர்களின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு கொண்டுசென்றது.
அதே படங்கள் மார்ச் 27, 2021 அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் மூன்று தொடர்புடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட்களுடன் வெளியிடப்பட்டன. கூடுதலாக, தாரா அர்செவனின் வலைப்பதிவில் திருமணத்தைப் பற்றிய ஒரு கட்டுரை இடம்பெற்றது, இதில் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
தாரா ஆர்செவனை அணுகி வைரலான இடுகையை பகிர்ந்தோம். பதிலுக்கு எங்களிடம், “இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை இல்லை. இந்தக் கூற்று முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டது.
ARY நியூஸின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நதீம் அஷ்ரஃப் பட்டையும் தொடர்பு கொண்டோம். வைரலான பதிவை மதிப்பாய்வு செய்த அவர், “ARY இது போன்ற எந்த ஆதாரமற்ற பதிவுகளையும் செய்திகளையும் தெரிவிக்கவில்லை. இது முற்றிலும் போலியானது.”
கடைசியாக, போலி இடுகையைப் பகிர்ந்த ‘தீபக் சி ஜரிவாலா’ என்ற நபரின் ஃபேஸ்புக் சுயவிவரத்தை மதிப்பாய்வு செய்ததில், அந்தக் கணக்கு ஒரு குறிப்பிட்ட கருத்தியல் சார்புடன் இணைந்த இடுகைகளை அடிக்கடி பகிர்கிறது என்பது தெரியவந்தது.
முடிவு: வைரலான புகைப்படத்தில் உள்ள பாகிஸ்தானின் கராச்சியில் திருமணம் செய்து கொண்ட தம்பதி உடன்பிறந்தவர்கள் என்ற கூற்றை விஷ்வாஸ் நியூஸின் விசாரணை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. படம் அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற பாரம்பரிய பாகிஸ்தானிய திருமணத்திலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் இந்த ஜோடிக்கு எந்த குடும்ப உறவும் இல்லை. மேலும், ARY நியூஸ் இது போன்ற எந்த செய்தியையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த வைரல் கூற்று முற்றிலும் தவறானது மற்றும் தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டது.
- Claim Review : கராச்சியில், ஒரு சகோதரர் தனது சொந்த சகோதரியை மணந்துள்ளார்.
- Claimed By : ஃபேஸ்புக் பயனர் 'தீபக் சி ஜரிவாலா'
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
|